திருவாருர், நவ. 21: திருவாரூர் மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை அரசு அலுவலர்கள் மற்றும் ஆட்சியாளர்கள் நேரில் சந்தித்து எவ்வித நிவாரணமும் வழங்கவில்லை என்று பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். கடந்த 15ம் தேதி நள்ளிரவில் கரையை கடந்த கஜா புயல் காரணமாக திருவாரூர், நாகை, தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 5 நாட்களாகியும் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர்களோ, ஆட்சியாளர்களோ அதிகாரிகளோ யாரும் நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டு தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக சாலை மறியல் போன்ற போராட்டங்கள் நடைபெறுவது மட்டுமன்றி அமைச்சர்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தும் சம்பவமும் இருந்து வருகிறது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் இதே போன்ற நிலை இருந்து வரும் நிலையில் இதுகுறித்து திருவாரூர் அருகே மாங்குடி கிராமத்தில் வசித்து வரும் மணி (90) என்பவர் கூறுகையில், புயல் அடித்து 5 நாட்களாகியும் எங்களுக்கு இதுவரையில் குடிநீர் கூட கிடைக்கவில்லை. இரவு நேரங்களில் விளக்கு எரிப்பதற்கு கூட மண்ணெண்ணெய் இல்லை. உணவும் சரிவர கிடைக்கவில்லை. இதுமட்டுமன்றி எங்களை யாரும் இதுவரையில் சந்தித்து ஆறுதல் கூட கூறவில்லை. நிவாரண உதவிகளை வழங்குவதில் ஆளுங்கட்சியினர் பாரபட்சம் காட்டுகின்றனர். எனவே விரைவில் குடிநீர் மற்றும் மின் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என மக்கள் தெரிவித்தனர்.