மதுரை, நவ. 20: நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். ஊட்டியில் உள்ள வானிலை ஆராய்ச்சி மையத்தில் பொறியாளராக வேலை செய்து வருகிறார். இவர் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடந்த உறவினர் வீட்டு திருமண விழாவில் கலந்து கொண்டார். பின்னர் பஸ்சில் மீண்டும் ஊருக்கு கிளம்பினார். மதுரை ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் நின்ற பஸ்சில் ஏறிய அவர், தனது பையை சீட்டில் வைத்து விட்டு கீழே இறங்கி நின்றார். சிறிது நேரம் கழித்து அவர் பஸ்சில் ஏறிய போது, சீட்டில் வைத்திருந்த பை மாயமானது தெரியவந்தது. அந்த பையில் 15 பவுன் நகைகள் இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அவர் அளித்த புகாரின்பேரில் கரிமேடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.