முத்துப்பேட்டை, அக்.30: முத்துப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தை கலைத்துவிட்டு புதியதாக அமைக்க வேண்டும் என முன்னாள் மாணவர்கள் திரண்டு வந்து கோரிக்கை விடுத்தனர். முத்துப்பேட்டையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முன்பு 1,500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்றனர். இப்பள்ளியில் படித்த ஏராளமானவர்கள் டாக்டர்கள், பொறியாளர்கள் மற்றும் பலர் அரசு உயர் பதவிகளில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் சமீபகாலமாக பள்ளியில் இயங்கி வந்த பெற்றோர் ஆசிரியர் கழகம் முறையாக இயங்காததால் பள்ளி நிர்வாகம் பெயரளவில் மட்டுமே இருந்து வந்தது. இதனால் படிப்படியாக கல்வியின் தரமும் குறைந்தது மட்டுமல்லாது மாணவர்கள் எண்ணிக்கையும் மிகவும் குறைந்துவிட்டது. தற்போது 400 மாணவர்கள் மட்டுமே இங்கு படித்து வருகின்றனர். இதற்கிடையில் பள்ளி மாணவர்கள் மத்தியில் அடிக்கடி கோஷ்டி மோதல் நடந்தன. இதனால் தினமும் மாணவர்களும் இங்கு பணியாற்றும் ஆசிரியர்களும் மிகவும் அச்சத்துடன் பள்ளிக்கு வரும் நிலைக்கு மாறியது. இதற்கிடையில் 3 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவராக இருந்த சண்முகம் மரணமடைந்தார்.