மார்த்தாண்டம், அக். 23: குமரி மாவட்டத்தில் இந்த ஆண்டு கோடை மழையை தொடர்ந்து, தென்மேற்கு பருவ மழையும் ஓரளவு கைகொடுத்தது. இந்த நிலையில், தற்போது தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் ஆறுகளில் ெவள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் சிற்றாறு அணை திறக்கப்பட்டுள்ளதால் கோதையாற்றில் நீர்வரத்து அதிகரித்து திற்பரப்பு அருவி ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அதுபோல குழித்துறை தாமிரபரணி ஆறும் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் குழித்துறை சப்பாத்து பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் செல்கிறது. மார்த்தாண்டத்தில் பால பணிகள் நடப்பதால், டூ-வீலர்களில் செல்லும் பலரும் சுற்றிச்செல்வதை தவிர்க்க குழித்துறை சப்பாத்து பாலத்தை பயன்படுத்தி வந்தனர். மேலும் பொதுமக்களும் இந்த வழியாக நடந்து செல்வது வழக்கம்.