மேலும் பலர் காய்ச்சலால் பாதிப்பு
நாகர்கோவில், அக்.18 : ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரியில் பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் மேலும் 3 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். குமரி மாவட்டத்தில் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. நாகர்கோவில் வடக்கு சற்குண வீதி நர்ஸ் லேன் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற பேராசிரியை ஒருவர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரியில் உள்ள சிறப்பு சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதே போல் கோட்டார் வட்டவிளையை சேர்ந்த காய்கறி வியாபாரி ஒருவரும், ராஜாக்கமங்கலம் அருகே உள்ள பகுதியை சேர்ந்த பெண் ஒருவரும் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தற்போது நாகர்கோலிலில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களின் குடும்பத்தாருக்கும் காய்ச்சல் பாதிப்பு உள்ளதா? என்பதை மருத்துவ பணியாளர்கள் கண்காணித்தனர். இந்த நிலையில் ராஜாக்கமங்கலம் பகுதியை சேர்ந்த பெண்ணின் குழந்தையான 5ம் வகுப்பு மாணவி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதே போல் ஆசாரிபள்ளம் பகுதியை சேர்ந்த மேலும் 2 பேர் தொடர் காய்ச்சல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். இவர்கள் 3 பேரும் தற்போது பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.