ஆண்டிபட்டி, அக்.12: ஆண்டிபட்டி பகுதி கால்நடை எருவிற்கு கேரளாவில் கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதனால் இயற்கை உரத்திற்காக ஆண்டிபட்டியில் இருந்து லாரிகளில் கேரளாவிற்கு கால்நடை எரு அனுப்பப்பட்டு வருகிறது. ஆண்டிபட்டி நகரைச் சுற்றியுள்ள கன்னியப்பிள்ளைபட்டி, தெப்பம்பட்டி, ஜி.கல்லுபட்டி, சித்தார்பட்டி, மேலபட்டி, மரிக்குண்டு, வேலாயுதபுரம், ஆசாரிபட்டி, ஏத்தக்கோயில், பாலக்கோம்பை உள்ளிட்ட கிராமங்களில் வெள்ளாடு,
செம்மறியாடு, தொழுமாடு, கறவை மாடுகள் என ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் வளர்க்கப்படுகின்றன. பல ஆண்டுகளாக இப்பகுதியில் போதியமழை பெய்யாததால் நீர் நிலைகள் வறண்டு காணப்பட்டது. மேய்ச்சல் நிலங்கள் அனைத்தும் தரிசானது மட்டுமின்றி விவசாயமும் பொய்த்துப் போனது. இதனால் கால்நடை வளர்ப்பவர்கள், குறைந்த விலைக்கு விற்கும் அவல நிலைக்கு ஆளானார்கள். ஆனால், கடந்த சில மாதங்களாக இப்பகுதியில் பெய்த தொடர் மழையினால் மேய்ச்சல் நிலங்கள் பசுமையடைந்தது.