‘ஏ கிளாஸ்’ அறை கேட்டு கருணாஸ் கோரிக்கை மனைவியுடன் ஒரு மணிநேரம் சந்திப்பு வேலூர் மத்திய சிறையில்

வேலூர், செப்.25: வேலூர் மத்திய சிறையில் நடிகர் கருணாசுக்கு ‘ஏ கிளாஸ்’ அறை வழங்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.போலீசார் மற்றும் தமிழக முதல்வருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக நடிகரும், எம்எல்ஏவுமான கருணாஸை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இந்நிலையில், பாதுகாப்பு கருதி நேற்று முன்தினம் மாலை 3.30 மணிக்கு அங்கிருந்து வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார்.பின்னர், நேற்று முன்தினம் மாலை 5.50 மணியளவில் வேலூர் மத்திய சிறையில் உயர் பாதுகாப்பு பிரிவுக்கு அருகில் உள்ள தனி அறையில் அடைக்கப்பட்டார். இவருக்கு அக்டோபர் 5ம் தேதி வரை நீதிமன்ற காவலுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், கருணாஸ் எம்எல்ஏ பதவியில் இருப்பதால் ‘ஏ கிளாஸ்’ அறை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று அவரது சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பரிந்துரைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து சிறை அதிகாரிகள் கூறுகையில், ‘கோர்ட் உத்தரவுப்படி நடிகர் கருணாஸ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் ‘ஏ கிளாஸ்’ அறை ஒதுக்க வேண்டும் என்று கருணாஸ் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், கோர்ட் அனுமதி வழங்கினால் மட்டுமே ‘ஏ கிளாஸ்’ அறை ஒதுக்க முடியும்’ என்றனர்.இதையடுத்து ‘ஏ கிளாஸ்’ அறையை பெற கருணாஸ் தரப்பில் கோர்ட் அனுமதி பெறுவதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று காலை கருணாஸ் மனைவி கிரேஸ் வேலூர் மத்திய சிறைக்கு வந்தார். அங்கு உரிய அனுமதி பெற்று கருணாஸை சந்தித்து பேசினார். காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை சுமார் ஒரு மணிநேரம் இந்த சந்திப்பு நடந்ததாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: