ஈரோடு, செப். 21: ஈரோடு அருகே வியாபாரிகள் சங்க தலைவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில், இதுவரை குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை. இந்த வழக்கில் எந்த துப்பும் கிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர். ஈரோடு அருகே மாணிக்கம்பாளையம் முனியப்பன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் செல்வம் (55). இவர் கொங்காளம்மன் கோவில் வீதி அனைத்து வியாபாரிகள் சங்க தலைவராகவும், தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பில் மாவட்ட துணை தலைவராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில், கடந்த 4ம்தேதி இரவு செல்வம் தனது மளிகை கடைக்கு சென்றுள்ளார். குடும்பத்தினரும் வெளியே சென்றுள்ளனர். அப்போது வீட்டில் யாரும் இல்லாத நிலையில், பைக்கில் வந்த மர்ம நபர்கள் செல்வத்தின் வீட்டின் மீது பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களை வீசினர்.