கருங்கல், ஆக.15: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:கடந்த 6ம் தேதி கேரள மாநிலம் கொச்சி அருகே முனம்பம் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற குமரி மாவட்டம் ராமன்துறை மீனவர்கள் 7 பேர், முள்ளூர்துறை மீனவர்கள் 2 பேர், மணக்குடி மீனவர்கள் 2 பேர், மேற்கு வங்க மீனவர்கள் 2 பேர் மற்றும் கேரள மீனவர் ஒருவர் என்று மொத்தம் 14 மீனவர்களை இந்திய அரசின் சரக்கு கப்பல் தேஷ் சக்தி இடித்து விபத்தை ஏற்படுத்திவிட்டு சென்றுவிட்டது. அந்த வழியே மீன்பிடிக்க சென்ற விசைப்படகு மீனவர்கள் இருவரை உயிருடனும், 5 பேரை சடலமாகவும் மீட்டுள்ளனர். இன்னும் 7 பேரின் கதி என்னவென்று தெரியவில்லை. விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச்சென்ற இந்திய கப்பல் மீது வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுத்து இறந்துபோன மீனவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கினால்தான் அக்குடும்பங்கள் வாழ முடியும். இந்த விபத்தினால் இரண்டு குடும்பங்கள் மொத்தமாக ஆண்களை இழந்து தவிக்கிறது.