கறம்பக்குடி, ஆக.14: கடந்த 6 மாதத்திற்கு மேலாக இருளில் மூழ்கி கிடக்கும் அம்மானிப்பட்டு கிராமத்திற்கு மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பிலாவிடுதி ஊராட்சி. இங்கு சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். பிலாவிடுதி, செவ்வாய்ப்பட்டி, பட்டமாவிடுதி, வெள்ளாளகொள்ளை, மானியவயல், அம்மானிப்பட்டு போன்ற கிராமங்கள் இவ்வூராட்சியில் அமைந்துள்ளன. இதில் அம்மானிப்பட்டு கிராமத்தில் நூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கடந்த 6 மாதத்திற்கு மேலாக தெருமின் விளக்குகள் எரியாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இரவு நேரங்களில் வெளியூர் சென்று திரும்பி வரும் அலுவலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் பெண்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். கடந்த 6 மாதமாகவே இந்த அவல நிலை தொடர்வதால் இரவு நேரங்களில் வெளியே செல்வதை பெண்கள் தவிர்த்து வருகின்றனர்.