புதுக்கோட்டை, ஆக. 14: புதுக்கோட்டையில் கருணாநிதிக்கு சிலை வைக்க இடம் வழங்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் திமுகவினர் மனு கொடுத்தனர். புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கணேஷ் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் திமுக நகர செயலாளர் நைனாமுகம்மது தலைமையில் திமுகவினர் கொடுத்த மனுவில், புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்த திமுக தலைவர் கருணாநிதியை நினைவுகூறும் வகையில் புதுக்கோட்டை நகரில் பிஎல்ஏ ரவுண்டானா அல்லது அரசு மகளிர் கலைக்கல்லூரி ரவுண்டானா ஆகிய இடங்களில் ஏதாவது ஒன்றில் கருணாநிதியின் முழுஉருவ வெண்கலசிலையை நிறுவுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என கூறியிருந்தனர்.