காளையார்கோவில், ஆக.14: காளையார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள விளையாட்டு மைதானம் குப்பை மேடாக மாறி வருகிறது. இதனால் மாணவர்கள் விளையாட முடியாமல் சிரமப்படுகின்றனர். காளையார்கோவிலில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி 1970ம் ஆண்டிற்கு முன் ஆரம்பிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டத்திலேயே 15 ஏக்கர் பரப்பளவில் பெரிய விளையாட்டு மைதானத்துடன் இப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு பயின்ற ஏராளமான மாணவ, மாணவிகள் பல்வேறு துறைகளில் பணிபுரிந்து வருகின்றார்கள். தற்போது 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றார்கள். இப்பள்ளியில் உள்ள மிகப்பெரிய விளையாட்டு மைதானத்தை சுற்றிலும் புதர்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மண்டிகிடக்கின்றன. இதனால் மாணவ, மாணவிகள் விளையாட முடியவில்லை.