தொண்டி, ஆக.14: தொண்டி அருகே உள்ள தீர்த்தாண்டதானம் கடற்கரையை சுத்தம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொண்டி அருகே உள்ள தீர்த்தாண்டதானம் வரலாற்று சிறப்புமிக்க ஊராகும். ராமபிரான் சீதையை தேடி இலங்கைக்கு செல்லும் போது தாகம் ஏற்பட்டுள்ளது. தாகத்தை தணிக்கும் பொருட்டு அகத்திய முனிவரால் நீர்த்த தடாகம் உருவாக்கப்பட்டது. அதுவே இங்குள்ள சர்வதீர்த்தமாகும். இங்குள்ள ஈஸ்வரன் சர்வதீர்த்தேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். ராமபிரான் தன் முன்னோர்களுக்கு இக்கடற்கரையில் தர்ப்பணம் செய்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன. இதன் தொடர்ச்சியாக ராமேஸ்வரம் தேவிபட்டினம் போல் இங்கும் ஆடி அமாவாசை, தை அமாவாசை உள்ளிட்ட தினங்களில் அளவுக்கதிகமான பொதுமக்கள் தர்ப்பணம் செய்ய வருவார்கள்.