குமாரபாளையம், ஆக.13: மேட்டூர் அணையிலிருந்து, காவிரி ஆற்றில் 1.20 லட்சம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால் குமாரபாளையம் நகராட்சி பகுதியில் தாழ்வான பகுதியில் உள்ள 78 வீடுகளில் வெள்ளம் புகுந்தது. இதையடுத்து இங்கு வசிக்கும் 136 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் பெய்துவரும் கனமழையால், அங்குள்ள அணைகள் நிரம்பி உபரிநீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், மேட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு 1லட்சத்து 30 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த உபரி நீரால், குமாரபாளையம் காவிரி கரையோரமுள்ள மணிமேகலை தெரு, கலைமகள் வீதி ஆகிய இடங்களில் உள்ள குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்துள்ளது.