வேலூர், ஆக.9:வேலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சிகளில் உள்ள அரசு கட்டிடங்கள், பள்ளி சுவர்களில் பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு ஓவியம் வரையும் பணி நடந்து வருகிறது.தமிழகம் முழுவதும் வரும் 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 50 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பைகளுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது பிளாஸ்டிக் பைகள் முழுவதுமாக தடை செய்யப்படும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பேப்பர் கப், தெர்மாகோல் தட்டுகள் உட்பட அனைத்து வகையான பிளாஸ்டிக் பைகளுக்கும் தடை விதிக்கபட உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வேலூர் கலெக்டர் அலுவலகம், மாநகராட்சி மற்றும் தாலுகா அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்கு விழிப்புணர்வு பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கான கூட்டத்தில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பான ஓவியங்களை வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கலெக்டர் ராமன் உத்தரவிட்டார்.