காரைக்கால், ஜூன் 21: பொதுமக்களின் புகாரையடுத்து காரைக்காலில் உள்ள மாம்பழக்கடை, மளிகை மற்றும் உணவங்களில் புதுச்சேரி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான மளிகை கடைகளில் காலாவதியான பொருட்களை விற்பதாகவும், ரசாயன கற்களால் பழுக்க வைக்கப்பட்ட மாங்கனிகளை விற்பதாகவும், மாங்கனி திருவிழா நெருங்கும் நேரத்தில் இது அதிகரிக்ககூடும். எனவே மாவட்ட நிர்வாகம் மக்கள் நலனில் அக்கறை கொண்டு திடீர் ஆய்வு நடத்த வேண்டுமென வலியுறுத்தி வந்தனர்.இந்நிலையில் காரைக்கால் மாதாகோவில் வீதி, மார்க்கெட் வீதி, பாரதியார் வீதி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் உள்ள பழக்கடை மற்றும் குடோன்களில் புதுச்சேரி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ரவிச்சந்திரன், குடிமைப்பொருள் அதிகாரி ரேவதி மற்றும் நகராட்சி அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது சந்தேகத்துக்கு இடமாக இருந்த மாங்கனிகள் மற்றும் பழவகைகளை பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் மாங்கனி திருவிழாவின்போது தரமான மாங்கனிகளை விற்பனை செய்ய வேண்டும். ரசாயன கற்களால் பழுக்க வைக்கப்பட்ட பழங்களை விற்பனை செய்தால் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கையும் விடுத்தனர்.