தரங்கம்பாடி, ஜூன் 21: வேளாண்துறையால் வழங்கப்படும் விதை உளுந்து, தனியாரில் வாங்கும் விலையை விட அதிகமாக உள்ளது என்று தரங்கம்பாடியில் நடந்த குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் குற்றஞ்சாட்டினர்.தரங்கம்பாடி தாலுகா அலுவலகத்தில் வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. தாசில்தார் தர் தலைமையில் நடந்தது. மண்டல துணை தாசில்தார் மகேந்திரன், உதவி வேளாண் அலுவலர் உமாபசுபதி மற்றும் பொதுப்பணித்துறை, வருவாய்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் விவசாயிகள் தில்லையாடியை சேர்ந்த ராஜேந்திரன், கருணாநிதி, காழியப்பநல்லூர் அருள்தாஸ் ஆகியோர் பேசியதாவது: விவசாயிகளுக்கு வேளாண்துறையால் வழங்கப்படும் விதைகள் உரிய காலத்தில் வழங்கப்படுவதில்லை. விதைகள் வழங்குவதில் ஏற்படும் காலதாமதத்தால் விவசாயிகள் தனியாரிடம் வாங்க வேண்டிய நிலை உள்ளது. இனிவரும் காலங்களிலாவது விதைகளை உரிய காலத்தில் வழங்க வேண்டும். வேளாண்துறையால் வழங்கப்படும் விதை உளுந்து, தனியார் விலையை விட அதிகமாக உள்ளது. எனவே விதை உளுந்துகளின் விலையை அரசு குறைக்க வேண்டும். தில்லையாடி, காழியப்பநல்லூர் பகுதிகளில் வடிகால் மற்றும் பாசனத்துக்கு பயன்படும் சிறுவாய்க்கால்களை தூர்வார வேண்டும். அதேபோல் மகிமலை ஆற்றையும் தூர்வார வேண்டும் என்றனர்.