தனியார் பொறியியல் கல்லூரியில் மாபெரும் தமிழ் கனவு என்ற தமிழ் மரபு, பண்பாட்டு பரப்புரை: கலெக்டர் பங்கேற்பு

திருவள்ளூர்: பூந்தமல்லி, தனியார் பொறியியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் சார்பாக மாபெரும் தமிழ் கனவு என்ற தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார். கல்லூரி தலைவர் முனைவர் பி.சின்னதுரை, இயக்குநர்கள் முனைவர் சக்தி குமார், முனைவர் சரண்யாஸ்ரீ சக்தி குமார், கல்லூரி முதல்வர் முனைவர் கே.மணி, பூந்தமல்லி வட்டாட்சியர் ஆர்.மாலினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் கவிஞர் மனுஷ்யபுத்திரன், ஊடகவியலாளர் மு.குணசேகரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். அப்போது கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்ததாவது: கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை - என்ற திருக்குறளின்படி, கல்வி ஒன்றே அழியாச் செல்வமாகும்.

கல்விக்கு ஒப்பான சிறந்த செல்வம் வேறேதும் இல்லை. பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுரைகளின்படி, மாபெரும் தமிழ் கனவு என்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது. நமது தமிழ் மரபின் பண்பாட்டின் பெருமையை அடுத்து வரும் இளைய தலைமுறையினர்களுக்கு குறிப்பாக கல்லூரி மாணவர்களுக்கு உணர்த்துவது என்பது ஆரோக்கியமான எதிர்கால சமுதாய கட்டமைப்பின் ஒரு முக்கியமான பகுதியாகும். எனவே, தமிழ்நாடு முழுவதும் உள்ள 100 கல்லூரிகளில் தமிழர்களின் மரபும், நாகரிகமும், சமூகத்தில் பெண்கள் மேம்பாடு, சமூக பொருளாதார முன்னேற்றம், மொழி மற்றும் இலக்கியம், கலை  மற்றும் பண்பாடு, தொல்லியலின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், தமிழகத்தின் தொழில் வளர்ச்சி, தொழில் முனைவோர்களுக்கான முன்னெடுப்புகள் மற்றும் வாய்ப்புகள், கல்வி புரட்சி, அரசின் திட்டங்கள் மற்றும் அதனை செயல்படுத்தும் முறைகள் போன்ற தலைப்புகளின் கீழ் சிறந்த சொற்பொழிவாளர்களை கொண்டு மாபெரும் தமிழ் கனவுகள் என்ற சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த 100 கல்லூரிகளை தேர்ந்தெடுக்கப்பட்டதில் திருவள்ளுர் மாவட்டத்திலிருந்து மூன்று கல்லூரிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, தற்பொழுது நம் மாவட்டத்தைச் சேர்ந்த மூன்றாவது நிகழ்ச்சி என்பதை மிக மகிழ்ச்சியுடன் அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ள மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டுதல்கள் மூலம் தமிழ் பெருமைகள் குறித்து புரிதலும் வழங்கப்பட்டுள்ளன. இவற்றை மாணவர்கள் தவறாமல் கருத்துகளை படித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும், ஆசிரியர்கள் இக்கருத்துக்களை சக மாணவர்களுக்கு கொண்டு சேர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன், என கலெக்டர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாபெரும் தமிழ் கனவு குறித்து இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்படும் வகையில் உருவாக்கப்பட்ட விழிப்புணர்வு காணொளியை மாவட்ட கலெக்டர், கவிஞர் மனுஷ்யபுத்திரன், ஊடகவியலாளர் மு.குணசேகரன் ஆகியோர் பார்வையிட்டனர். இதனைத் தொடர்ந்து, “ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவும்” என்ற தலைப்பில் கவிஞர் மனுஷ்யபுத்திரனும், “உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்” என்ற தலைப்பில் ஊடகவியலாளர் மு.குணசேகரனும் கருத்துரை வழங்கி, மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர்.

மேலும், இந்நிகழ்ச்சியில் மாணவ, மாணவியரிடையே நடைபெற்ற தமிழ்ப் பெருமிதம் துணுக்குகள் வாசித்து விளக்கம் அளிக்கும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட கலெக்டர் பெருமிதச் செல்வி மற்றும் பெருமிதச் செல்வன் என்ற பட்டம் சூட்டி பாராட்டுச் சான்றிதழையும், புத்தகங்களையும் பரிசாக வழங்கினார். தொடர்ந்து, இந்நிகழ்ச்சியில் மாணவ மாணவியரிடையே நடைபெற்ற கேள்வி பதில் பகுதியில் சிறந்த கேள்விகளை கேட்ட மாணவ மாணவியர்களுக்கு கவிஞர் மனுஷ்யபுத்திரன் கேள்வியின் நாயகி மற்றும் கேள்வியின் நாயகன் என்ற பட்டம் சூட்டிப் பாராட்டுச் சான்றிதழையும் புத்தகங்களையும் பரிசாக வழங்கினார். இதில் பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: