சென்னை: ரிவைசிங் கமிட்டி உள்பட பல்வேறு பிரச்னைகளை கடந்து திட்டமிட்டபடி பராசக்தி திரைப்படம் இன்று திரைக்கு வருகிறது. டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்க, சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா, ராணா டகுபதி, சேத்தன், பசில் ஜோசப் நடித்துள்ள படம் ‘பராசக்தி’. ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார்.
ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் இன்பன் உதயநிதி வெளியிடுகிறார். இன்று திரைக்கு வரும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த இப்படத்துக்கு ‘ஜனநாயகன்’ படத்தை போலவே தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் நீடித்து வந்தது. ‘பராசக்தி’ படக்குழுவினரிடம் ரிவைசிங் கமிட்டி கேட்ட வரலாற்று தரவுகள்தான் இதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.
இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையப்படுத்தி, கடந்த 1960களில் நடப்பது போன்ற கதைக்களத்துடன் ‘பராசக்தி’ படம் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தை பார்த்த ரிவைசிங் கமிட்டி, அதில் சில காட்சிகள் குறித்து, ‘பராசக்தி’ குழுவினரிடம் விளக்கம் கேட்டதாக தெரிகிறது. இதை தெடர்ந்து அதற்கான சான்றுகளை படக்குழுவினர் ரிவைசிங் கமிட்டிக்கு சமர்ப்பித்ததாகவும், ஆனால் அந்த சான்றுகள் போதவில்லை என்று ரிவைசிங் கமிட்டி தெரிவித்ததாகவும் கூறப்பட்டது.
இதனால் திட்டமிட்டபடி ‘பராசக்தி’ படம் இன்று வெளியாகுமா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், நேற்று ரிவைசிங் கமிட்டி ‘பராசக்தி’ படத்துக்கு யு/ஏ 16+ சான்றிதழ் வழங்கியுள்ளது. 2 மணி நேரம், 42 நிமிடங்கள் ஓடும் இப்படம் திட்டமிட்டபடி இன்று வெளியாகிறது. மேலும், ‘பராசக்தி’ படத்தை இணையதளங்களில் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
தணிக்கை சான்றிதழ் வழங்குவதற்கு முன்பே, வாரியம் அளித்த பரிந்துரைகளின்படி, 27 இடங்களில் வார்த்தைகள் மாற்றப்பட்டுள்ளன. அதன்படி, ‘தீ பரவட்டும்’ என்ற வார்த்தைக்கு பதிலாக ‘நீதி பரவட்டும்’ என்று மாற்றப்பட்டுள்ளது. இது அண்ணா எழுதிய புகழ்பெற்ற புத்தகத்தின் தலைப்பு. இந்தி திணிப்புக்கு எதிரான வசனங்களின் சப்-டைட்டில்கள் நீக்கப்பட்டுள்ளன. சுமார் 52 இடங்களில் வசனங்கள் மியூட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எனினும், முந்தைய கால உண்மை சம்பவத்தை திரைப்படமாக உருவாக்குவதில் இருக்கும் நடைமுறை சிக்கல்கள் மற்றும் நடிகர், நடிகைகளின் ஆடை வடிவமைப்பு, கேரக்டர்களுக்கு ஏற்ற நடிகர்கள் தேர்வு போன்ற பல்வேறு சிக்கல்களை தாண்டி, இன்று திட்டமிட்டபடி உலகம் முழுவதும் ‘பராசக்தி’ படம் திரைக்கு வருகிறது. இதனால் ரசிகர்களும், தமிழ் ஆர்வலர்களும் இப்படத்தை திரையரங்குகளில் பார்க்க ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
* இணையதளங்களில் வெளியிட தடை
நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா நடித்து, சுதா கொங்கரா இயக்கி, ஆகாஷ் பாஸ்கரனின் டான் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள பராசக்தி திரைப்படம் இன்று திரைக்கு வர உள்ளது. இந்த நிலையில், பராசக்தி திரைப்படத்தை இணையதளங்களில் சட்ட விரோதமாக வெளியிட தடைவிதிக்க இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு உத்தரவிடக்கோரி படத்தின் தயாரிப்பு நிறுவனமான டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த மனு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தபோது, பட தயாரிப்பு நிறுவனம் சார்பில், முன்னணி நடிகர்களை கொண்டு பெரும் பொருட்செலவில் திரைப்படம் எடுக்கபட்டுள்ளதால், சட்ட விரோதமாக இணையதளத்தில் வெளியானால் ஈடு செய்யமுடியாத இழப்பு ஏற்படும் என தெரிவித்தார். வழக்கை விசாரித்த நீதிபதி பராசக்தி, படத்தை இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியிடுவதற்கு தடைவிதித்து உத்தரவிட்டார்.
