சென்னை: வரும் கல்வியாண்டிற்கான டிப்ளமோ மருத்துவ பட்டய படிப்புகள் முதலாம் இறுதிக்கட்ட கலந்தாய்விற்கான மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை ஆணையர் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு: 2025-26ம் கல்வியாண்டிற்கு, சென்னை மற்றும் பாளையங்கோட்டையில் உள்ள அரசு ஆயுஷ் துணை மருத்துவ பட்டயப்படிப்பு பள்ளிகளில் மீதமுள்ள காலி இடங்களுக்கான ((DIP / DNT) பட்டயப்படிப்புகள் சேர்க்கைக்கான முதலாம் இறுதிக்கட்ட கலந்தாய்விற்கு இணையவழி விண்ணப்பங்கள் தகுதியுள்ளவர்களிடம் இருந்து வரவேற்கப்படுகின்றன.
இணையவழியில் மட்டுமே விண்ணப்பப் படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். ஏற்கனவே விண்ணப்பித்து முதல் இரண்டு கட்ட கலந்தாய்விலும் இடம் கிடைக்காதவர்கள், முதல் இரண்டு கட்ட கலந்தாய்வில் இடம் கிடைத்தும் சேராதவர்கள், இடைநிறுத்தம் செய்தவர்கள், மீண்டும் விண்ணப்ப கட்டணம் செலுத்தாமல் பதிவு செய்துகொண்டு கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம். இறுதிக்கட்ட கலந்தாய்வு காலியிட தேர்வு நிரப்புதலுக்கு தகுதியற்றவர்கள்.
முந்தைய சுற்றுகளில் ஏதேனும் ஒன்றில் (DIP / DNT) பாராமெடிக்கல் படிப்புகளில் சேர்ந்து இந்த சுற்று வரை படித்துக்கொண்டிருப்பவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க முடியாது. மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள், விண்ணப்பக் கட்டணம் மற்றும் பிற கட்டண விவரங்கள், கலந்தாய்விற்கான அட்டவணை மற்றும் பிற தகவல்களினை www.tnhealth.tn.gov.in., www.tnayushselection.org. என்கின்ற வலைதளங்களில் அறியலாம். இணையவழி விண்ணப்பம் பதிவு செய்ய வருகிற 12ம் தேதி கடைசி நாள் ஆகும்.
