அம்மாவின் சிகிச்சைக்காக வாங்கிய கடனை திரும்பி கொடுக்க முடியாததால் மகன் தூக்கிட்டு தற்கொலை

ஆவடி: ஆவடி ஆனந்த நகர் அங்காளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக்(29). கூலி தொழிலாளி. இவருக்கும் இவரது அக்கா லாவண்யாவிற்கும் திருமணமாகவில்லை. சமீபத்தில் இவரது அம்மா தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சைக்காக ரூ.2 லட்சம் வரை கடன் வாங்கியதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து, கார்த்திக்கின் தாய் கடந்த நான்கு மாதத்திற்கு முன் இறந்து விட்டார். எனவே, அக்காவுடன் வாடகை வீட்டில் கார்த்திக்  வசித்து வந்தார்.

இதில், அம்மாவின் சிகிச்சைக்காக வாங்கிய கடனை திருப்பி அடைக்க முடியாத சூழ்நிலையில் கார்த்திக் மிகவும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தூங்க சென்றவர் மறுநாள் காலை இவரது அக்கா பார்த்தபோது கார்த்திக் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.  தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: