சென்னை: சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி தியேட்டரில் படம் பார்க்க நரிக்குறவர்களை உள்ளே அனுமதி மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சிம்பு, பிரியா பவானி சங்கர், கவுதம் கார்த்திக் நடித்துள்ள படம் பத்து தல. இந்த படம் நேற்று திரைக்கு வந்துள்ளது. கோயம்பேட்டிலுள்ள ரோகிணி தியேட்டரில் இந்த படத்தை பார்க்க நரிக்குறவ பெண் ஒருவர், சிறுவர்களுடன் வந்தார். அவரிடம் படத்துக்கான டிக்கெட்டுகள் இருந்தன. ஆனாலும், அவரை தியேட்டருக்குள் ஊழியர் அனுமதி தர மறுத்தார். அவர்களை வெளியே போகும்படியும் கைகாட்டினார். இந்த காட்சியை பெண் ஒருவர் வீடியோவாக எடுத்து டிவிட்டரில் பதிவிட்டார். இதையடுத்து ரோகிணி தியேட்டர் நிர்வாகத்துக்கு எதிராக நெட்டிசன்களும் சமூக ஆர்வலர்களும் கொதித்து எழுந்தனர். ‘தீண்டாமை ஒழிந்துவிட்டதாக சொன்னாலும் அது இன்றும் ஒழியவில்லை. இதுபோன்ற நபர்களால் நாடு பின்னோக்கி செல்லும்’ என பலர் தங்களது கண்டனங்களை தெரிவித்தனர். அதே சமயம், தியேட்டரில் இருந்த ரசிகர்களும் ரோகிணி தியேட்டர் நிர்வாகிகளிடம் அந்த பெண்ணை அனுமதிக்கும்படி கேட்டு சண்டை போட்டனர். ஆனாலும் நிர்வாகிகள் அவர்களை அனுமதிக்கவில்லை. இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்தது.