புது டெல்லி: மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரின் 50 கிலோ பிளை வெயிட் பிரிவில், இந்திய வீராங்கனை நிக்கத் ஜரீன் தொடர்ந்து 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார்.
இறுதிப் போட்டியில் வியட்னாம் வீராங்கனை குயென் தி தாமுடன் நேற்று மோதிய ஜரீன் 5-0 என்ற புள்ளிக் கணக்கில் அபாரமாக வென்று தங்கப் பதக்கத்தை முத்தமிட்டார். கடந்த ஆண்டு நடந்த உலக சாம்பியன்ஷிப் தொடரிலும் சாம்பியன் பட்டம் வென்றிருந்த அவர், தொடர்ந்து 2வது முறையாக தங்கப் பதக்கத்தை கைப்பற்றி அசத்தியுள்ளார். மேரி கோம் 6 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ள நிலையில், அவருக்கு பிறகு உலக சாம்பியன்ஷிப்பில் ஒன்றுக்கு மேற்பட்ட தங்கப் பதக்கம் வென்ற 2வது இந்திய வீராங்கனை என்ற பெருமை ஜரீனுக்கு கிடைத்துள்ளது.