திருவள்ளூர்: தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சார்பில் திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக உள்ள மஞ்சப்பை உபயோகம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவர்களின் பேரணி, கருத்தரங்கம் பிரசார வாகனங்கள் என பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிகழ்ச்சிகளை மாவட்ட சுற்றுச் சூழல் பொறியாளர் ரவிச்சந்திரன், சுற்றுச்சூழல் பொறியாளர் சம்பத்குமார், உதவி பொறியாளர்கள் ரகுகுமார், சபரிநாதன் மற்றும் மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலர்கள் நடத்தி வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக மஞ்சப்பை உபயோகப்படுத்தும் வகையில் ரூ.10 நாணயம் மற்றும் நோட்டு செலுத்தி மஞ்சப்பை பெற்றுக் கொள்ளும் வகையில் மஞ்சப்பை வழங்கும் இயந்திரத்தை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும், திருவள்ளூரில் உள்ள மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலகத்திலும் நிறுவப்பட்டு கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். இந்நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஆவடி எச்விஎப் மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் 120 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.