பூண்டி ஏரியில் மீன் பிடிக்க வந்த மீனவர் மயங்கி விழுந்து பலி

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த அரும்பாக்கம் இருளர் காலனியை சேர்ந்தவர் சீனிவாசன்(50). மீனவரான இவர் நேற்று அதிகாலை மீன் பிடிப்பதற்காக பூண்டி ஏரிக்கு படகில் சென்றுள்ளார். அப்போது சீனிவாசன் திடீரென மயங்கி படகில் இருந்து தண்ணீருக்குள் விழுந்துள்ளார். தகவலறிந்த புல்லரம்பாக்கம் போலீசார், திருவள்ளூர் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து புல்லரம்பாக்கம் போலீசார் மற்றும் திருவள்ளூர் தீயணைப்புதுறை நிலைய அலுவலர் இளங்கோவன் தலைமையில் தீயணைப்பு துறையினர் பூண்டி ஏரியில் பல இடங்களிலும் தேடினர். ஆனால் எந்த தகவலும் இல்லை.

இந்நிலையில் இன்று காலை, மீனவர் சீனிவாசன் உடல் மீன்பிடிக்கும் வலையில் சிக்கிக் கொண்டு ஏரியில் சடலமாக மிதந்தது. தகவலறிந்து புல்லரம்பாக்கம் போலீசார் சடலத்தை கைப்பற்றி திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: