திருத்தணி கோயிலுக்கு 3 மாதங்களுக்குள் வெள்ளித்தேர்: கோயில் துணை ஆணையர் தகவல்

திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றவும், பிரமோற்சவங்கள் நடக்கும் போது மாடவீதியில் உற்சவர், தங்கத்தேர், வெள்ளித்தேர் ஆகியவற்றில் உலா வருவதற்கு வசதியாக, தங்கத்தேர், வெள்ளித் தேர் கோயிலில் இருந்தன. முறையாக கோயில் நிர்வாகம் பராமரிக்காததால் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் வெள்ளித்தேர், தங்கத்தேர் பழுதடைந்தன. இந்து அறநிலைத்துறை ஆணையரின் உத்தரவின் பேரில் கடந்த ஆண்டு இறுதியில் தங்கத்தேர் சீரமைக்கப்பட்டு பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. இதேபோல் வெள்ளித்தேர் செய்வதற்கு ஏதுவாக, மரத்தேர் கடந்த மாதம் தொழிலதிபர் ஒருவர் நன்கொடை மூலம் வழங்கப்பட்டது.

இதனை அடுத்து  இந்து அறநிலையத்துறை ஆணையரிடம் மரத்தேரில் வெள்ளி தகடுகள் பதிக்க அனுமதி வழங்குமாறு முருகன் கோயில் நிர்வாகம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இந்து அறநிலைத்துறை ஆணையர் அனுமதி வழங்கியதை அடுத்து நேற்று திருத்தணி முருகன் மலைக்கோவில் வளாகத்தில் மரத்தேரில் வெள்ளி தகடுகள் பதிக்கும் பணி முருகன் கோயில் துணை ஆணையர் விஜயா, வேலூர் துணை ஆணையர் நகை சரிபார்ப்பு அலுவலர் ரமணி, கோவில் கண்காணிப்பாளர் சித்ராதேவி ஆகியோர் முன்னிலையில் வெள்ளி தகடுகளின் எடை சரிபார்க்கப்பட்டு  தொடங்கி வைக்கப்பட்டது.

இதுகுறித்து கோயில் துணை ஆணையர்  விஜயா தெரிவித்ததாவது: திருத்தணி முருகன் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக  செலுத்தும் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் கோவில் வங்கி கணக்கில்  சேமித்து வைக்கப்படுகிறது. இதில் 539 கிலோ வெள்ளி  மரத்தேரில் பதிப்பதற்கு அறநிலை துறை ஆணையரின் அனுமதி பெற்று  பயன்படுத்தப்படுகிறது. திருவாரூர் பகுதியைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் மூலம் 4 கோடி ரூபாய் மதிப்பிலான வெள்ளி தகடுகள் பதிக்கும் பணி நடைபெறுகிறது. மூன்று மாதங்களுக்குள் பணிகள் முடிக்கப்பட்டு பக்தர்களின் பயன்பாட்டிற்கு வெள்ளி தேர் கொண்டுவரப்படும்  என துணை ஆணையர் விஜயா தெரிவித்தார்.

Related Stories: