தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு தரும் நிதி பங்கு ரூ.25000 கோடி குறைந்தது: நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் டெல்லியில் பேட்டி

புதுடெல்லி: டெல்லி வந்த தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர்  ஜெய்சங்கர் மற்றும் ஒன்றிய நிதித்துறை செயலாளர் ஆகியோரை நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்தார். இதன் பின்னர் டெல்லியில் செய்தியாளர்களை  சந்தித்த அவர் கூறியதாவது: வரும் திங்கட்கிழமை தமிழ்நாட்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. தமிழகத்தின் நிதி நிலைமை முன்னர் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருந்தது.  தற்போது அதை படிப்படியாக திருத்தி போன ஆண்டு பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறையையும், நிதி பற்றாக்குறையையும்  குறைத்தோம். இந்த ஆண்டும் அதேபோன்ற செயல்பாடு தொடரும்.

ஒன்றிய அரசால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கடன் வாங்கும் உச்ச வரம்புக்கும்  தற்போதைய புதிய அறிவித்திருக்கும் அறிவிப்புக்கு பல வேறுபாடுகள் உள்ளன. ஆனால் ஒன்றிய அரசு அறிவித்த கடன் வாங்கும் உச்ச வரம்பு அளவுக்கு தமிழகம் கடன் வாங்க போவதில்லை. தமிழ்நாடு பட்ஜெட்டுக்காக புதிதாக கூடுதல் நிதியை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கவில்லை. கடந்த 20 ஆண்டுகளாக ஒவ்வொரு நிதிக்குழு காலத்திலும் தமிழகத்துக்கான வழங்கப்படும் ஒன்றிய அரசின் நிதி பங்கு குறைத்து கொண்டே போகிறது.

தற்போது ஒன்றிய அரசுடமிருந்து வரும் நிதிப்பங்கு 3 சதவீதத்துக்கும் கீழாக குறைந்துள்ளது, குறிப்பாக உற்பத்தியிலிருந்து 1 சதவீதம் நிதி ஒன்றிய அரசிடமிருந்து குறைந்துள்ளது. குறிப்பாக உற்பத்தி மதிப்பிலிருந்து தமிழகத்துக்கு ஒன்றிய அரசிடமிருந்து  வரும் பங்கில் சுமார் ரூ.25,000 கோடி ரூபாய் குறைத்துள்ளது. அதேப்போன்று சர்வதேச அளவில் பொருளாதார சரிவு வந்தால், ஓரளவுக்கு தான் இந்திய பொருளாதாரம் பாதிக்கப்படும், அதேவேளையில் ஐரோப்பிய நாடுகளில் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டால் அது இந்தியா போன்ற நாடுகளுக்கு வணிக ரீதியிலான வாய்ப்புகளை உருவாக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: