மதுபான கொள்கை வழக்கில் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்குமா?.. உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு


புதுடெல்லி: மதுபான கொள்கை வழக்கில் முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பிக்க உள்ளது. டெல்லி புதிய மதுபான கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திர சேகர ராவின் மகளும், பிஆர்எஸ் கட்சி தலைவருமான கவிதா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். இந்த வழக்கில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீது உச்ச நீதிமன்றம் இன்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உள்ளது. இந்த நிலையில் இதே வழக்கில் கெஜ்ரிவலுக்கு எதிராக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உள்ளது. அதில், ‘‘கடந்த 2021ம் ஆண்டு டெல்லியில் கொண்டு வரப்பட்ட புதிய மதுபானக் கொள்கை விவகாரத்தில் முதல்வர் கெஜ்ரிவால்தான் மூளையாகவும் செயல்பட்டுள்ளார்” என்று அமலாக்கத்துறை குறிப்பிட உள்ளது. ஜாமீன் வழங்க ஈடி எதிர்ப்பு: இதற்கிடையே முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கக் கூடாது என அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

அதில், “அரசியல் சாசன விதிகளின் அடிப்படையில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளராக இல்லை என்றாலும், பிரசாரம் செய்வதற்காக எந்த ஒரு அரசியல் தலைவருக்கும் இதுவரை இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டது இல்லை. எனவே இந்த வழக்கில் முக்கிய நபராக இருக்கும் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கினால் அது தவறான முன்னுதாரணமாக அமைந்து விடும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மதுபான கொள்கை வழக்கில் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்குமா?.. உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: