பெரம்பூர்: வியாசர்பாடி குட்ஷெட் பகுதியில் லாரி டிரைவர்களை மிரட்டி, மாமூல் கேட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். தப்பிய ஒருவரை தேடி வருகின்றனர். வியாசர்பாடி குட்ஷெட் பகுதியில் வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்தும் லாரிகள் வந்து அரிசி, மிளகாய், கோதுமை உள்ளிட்ட பொருட்களை வெளி மாநிலங்களுக்கு ஏற்றிச் செல்வது வழக்கம். இதனால் அப்பகுதியில் எப்போதும் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். சில நேரங்களில் நெல் மூட்டைகளை லாரிகளில் ஏற்ற கால தாமதமாகும்போது, லாரிகள் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்படுவது வழக்கம். அப்படி நிறுத்தி வைக்கப்படும் லாரி டிரைவர்களிடம் தினமும் வந்து சிலர் மாமூல் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர். மாமுல் தரவில்லை என்றால், லாரிகளை இங்கே நிறுத்தக்கூடாது என்று டிரைவர்களுக்கு அவர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து லாரி டிரைவர்கள் தங்கள் உரிமையாளர்களிடம் தெரிவித்தனர்.