புதுடெல்லி: இந்தியாவுக்கு 4 நாள் பயணமாக வந்த ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானிஸ் டெல்லியில் நேற்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அதைத் தொடர்ந்து, ஒன்றிய வர்த்தக அமைச்சர் பியூஸ் கோயல், ஆஸ்திரேலிய வர்த்தக அமைச்சர் டான் பாரெலுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது கடந்த ஆண்டு டிசம்பரில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மேற்கொண்ட தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது குறித்து பேசினர். இதற்கான பேச்சுவார்த்தைகளை இந்த ஆண்டு இறுதிக்குள் முடிப்பது என இரு அமைச்சர்களும் உறுதி ஏற்றுள்ளனர். தற்போது, இரு நாடுகளுக்கு இடையேயான மொத்த வர்த்தகத்தின் மதிப்பு ரூ.2.4 லட்சம் கோடியாக உள்ளது. இதை அடுத்த 5 ஆண்டுக்குள் ரூ.4 லட்சம் கோடி வரையிலும் உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே போல, இரு தரப்பு வர்த்தக மதிப்பு ரூ.8 லட்சம் கோடியை எட்டவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.