மக்களவையில் நான்கு ஆண்டுகளாக துணை சபாநாயகர் இல்லை: காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடெல்லி: அரசியலமைப்புக்கு எதிராக கடந்த 4 ஆண்டுகளாக துணை சபாநாயகர் இல்லாமலேயே மக்களவை செயல்படுவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. மக்களவை துணை சபாநாயகர் பதவி வழக்கமாக, மரபுப்படி முக்கிய எதிர்க்கட்சிக்கு வழங்கப்படும். இந்த பதவி கடந்த 2019ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி முதல் காலியாக உள்ளது. நாடாளுமன்றத்தில் துணை சபாநாயகர்  ஏன் தேர்வு செய்யப்படவில்லை என்று கடந்த மாதம் உச்ச நீதிமன்றம் ஒன்றிய அரசுக்கு கேள்வி எழுப்பி இருந்தது.

இந்நிலையில், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது டிவிட்டரில், ``கடந்த 4 ஆண்டுகளாக, மக்களவை துணை சபாநாயகர் இல்லை. இது அரசியலமைப்புக்கு எதிரானது,’’ என்று கூறியுளார்.

மேலும் அவர், ``நேருவை கடுமையாக விமர்சித்தவரும் எதிர்க்கட்சியான அகாலி தளத்தை சேர்ந்தவருமான எம்பி சர்தார் ஹூக்கம் சிங் பெயரை துணை சபாநாயகர் பதவிக்கு நேரு 1956ம் ஆண்டு மார்ச் மாதம் முன் மொழிந்தார். எந்த போட்டியுமின்றி அவர் ஒருமனதாக தேர்வானார் என்பது வரலாறு,’’ என்று கூறியுள்ளார்.

Related Stories: