75 ஆண்டுக்கு பின் வலைதளத்தினால் ஒன்று சேர்ந்த சீக்கிய குடும்பம்: இந்தியா-பாக். பிரிவினையின் போது பிரிந்தது

லாகூர்: சுதந்திரத்துக்கு முன்பு அரியானாவின் மகிந்திரகர் மாவட்டத்தின் கோம்லா கிராமத்தில் சகோதரர்கள் குருதேவ் சிங், தயா சிங் மறைந்த தங்களது தந்தையின் நண்பர் கரீம் பாஷ் உடன் வசித்து வந்தனர். கரீம் பாஷ்  இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் போது பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஜாங் மாவட்டத்துக்கு புலம்பெயர்ந்தார். குருதேவ் அவருடன் பாகிஸ்தான் சென்றார். தயா சிங் தனது தாய்மாமா உடன் அரியானாவில் இருந்து விட்டார்.

பாகிஸ்தான் சென்ற கரீம் குருதேவ் சிங்கிற்கு குலாம் முகமது என்று பெயரிட்டார். இதனிடையே, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குருதேவ் சிங் காலமானார்.  அவர் இறப்பதற்கு முன், தனது சகோதரர் தயா சிங்கை கண்டுபிடித்து தரும்படி இந்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியதாக குருதேவ் சிங்கின் மகன் முகமது ஷரீப் கூறினார். இந்நிலையில், சமூக வலைதளத்தின் மூலம் முகமது ஷரீப் தனது சித்தப்பா தயா சிங்கை கண்டு பிடித்தார்.

பின்னர், அவர்கள் பாகிஸ்தானில் கர்தார்பூர் வழித்தடத்தில் உள்ள குருத்வாரா தர்பார் சாகிப்பில்  சந்தித்தனர். அப்போது, 75 ஆண்டுகளுக்கு முன் பிரிந்த குருதேவ் சிங், தயா சிங்கின் குடும்பத்தினர் ஆட்டம் ஆடி, பாட்டு பாடி, மலர்கள் தூவி மகிழ்ச்சியாக மீண்டும் ஒன்றிணைந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது.

Related Stories: