உச்ச நீதிமன்றம் மீண்டும் உறுதி அமைச்சரவை முடிவுக்கு கட்டுப்பட்டவர் ஆளுநர்

புதுடெல்லி: ‘மாநில அமைச்சரவையின் முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர்’ என உச்ச நீதிமன்றம் மீண்டும் ஒருமுறை உறுதி செய்துள்ளது பஞ்சாப்பில் ஆம் ஆத்மி அரசின் முதல்வர் பகவந்த் சிங் மானுக்கும், ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கும் இடையேயான மோதல் தீவிரமடைந்தது சிங்கப்பூரில் பயிற்சி பெற 36 அரசுப் பள்ளி முதல்வர்களை தேர்வு செய்ததில் முறைகேடு நடந்திருப்பதாகவும், அதுதொடர்பாக விளக்கம் அளிக்க முதல்வர் மானுக்கு ஆளுநர் பன்வாரிலால் கடந்த மாதம் கடிதம் எழுதினார் அதற்கு முதல்வர் மான், ஓட்டு போட்ட 3 கோடி மக்களுக்கு மட்டுமே தான் பதில் சொல்ல கடமைப்பட்டிருப்பதாகவும், ஒன்றிய அரசால் நியமிக்கப்படும் ஆளுநருக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் பதில் அளித்தார்

இந்த சண்டையால், மார்ச் 3ம் தேதி சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரை கூட்ட அனுமதி கேட்ட அமைச்சரவையின் கடிதத்தை ஆளுநர் கிடப்பில் போட்டார் இதை எதிர்த்து ஆம் ஆத்மி அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது  ஆளுநர் தரப்பில் ஆஜரான ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘‘அமைச்சரவையின் கடிதத்தை ஆளுநர் ஏற்றுக் கொண்டுள்ளார் எனவே இந்த பிரச்னை நீடிக்காது’’ என தெரிவித்தார் இதைத் தொடர்ந்து, தலைமை நீதிபதி சில அறிவுரைகளை வழங்கினார் அதில், ‘‘மாநில அமைச்சரவையின் முடிவுகளுக்கு ஆளுநர் கட்டுப்பட வேண்டும்’’ எனக் கூறினார் ஏற்கனவே ராஜிவ்காந்தி கொலை குற்றவாளிகள் தொடர்பான வழக்கிலும், ஆளுநர் மாநில அரசின் முடிவுகளுக்கு கட்டுப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது

Related Stories: