ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் 22வது சட்ட ஆணையத்தின் பதவிக்காலம் நீட்டிப்பு

புதுடெல்லி: நாட்டின் 22வது சட்ட ஆணையத்தின் பதவிக்காலத்தை அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி வரை நீட்டிக்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சட்டம் இயற்ற வேண்டிய விவகாரங்கள் மற்றும் சட்ட சீர்த்திருத்தங்கள் தொடர்பாக ஒன்றிய அரசுக்கு ஆலோசனை வழங்கக் கூடிய சட்ட ஆணையம் குறிப்பிட்ட கால இடைவெளியில் அமைக்கப்படுவது வழக்கம். சுமார் 4 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு கடந்த 2022ம் ஆண்டு 22வது சட்ட ஆணையம் அமைக்கப்பட்டது. இதன் பதவிக்காலம் கடந்த 20ம் தேதியுடன் நிறைவடைந்தது.

இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் 22வது சட்ட ஆணையத்தின் பதவிக்காலத்தை அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி வரை நீட்டிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் தலைவராக ஓய்வு பெற்ற கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி உள்ளார். இதே போல, இந்தியா, கயானா இடையே விமான சேவைகள் தொடங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 2012ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கயானாவில் வசிக்கும் மக்களில் 40 சதவீதம் பேர் இந்தியர்கள் ஆவர். மேலும், சர்வதேச சிவில் விமான போக்குவரத்து தொடர்பான சிகாகோ மாநாட்டு ஒப்பந்தம் தொடர்பான 3 நெறிமுறைகளை அங்கீகரிக்கவும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

Related Stories: