வாணியம்பாடி அருகே பயங்கரம் பட்டாசு கடையில் தீப்பற்றி தந்தை, 8 வயது மகன் பலி: 2 பேர் படுகாயம்

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே பட்டாசு கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், தந்தை மற்றும் அவரது 8 வயது மகன் உடல் கருகி பலியாகினர். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த புத்துக்கோயில், ஈச்சங்கால் கிராமத்தை சேர்ந்தவர் குமார் (45). இவர் புத்துக்கோயில் பகுதியில பட்டாசு கடை வைத்துள்ளார். இவரது மனைவி லட்சுமி (35). இவர்களது மூத்த மகள் 8ம் வகுப்பும், இளைய மகள் 6ம் வகுப்பு படித்து வருகின்றனர். மகன் தயாமூர்த்தி (8) 3ம் வகுப்பு படித்து வந்தார். குமார் நேற்று காலை பட்டாசு கடையை திறந்து வியாபாரத்தில் ஈடுபட்டார். விடுமுறை நாள் என்பதால், மகன் தயாமூர்த்தியையும் அழைத்து வந்திருந்தார்.

புத்து மாரியம்மன் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக வந்த உறவினர்கள் ஆம்பூர் அடுத்த மிட்டாளம் பகுதியை சேர்ந்த ராமன்(35), வேலாயுதம்(57) ஆகியோரும் கடைக்கு வந்து குமாருடன் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென கடைக்குள் தீப்பிடித்து விற்பனைக்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. அவசர கதவு பூட்டப்பட்டிருந்ததால் உள்ளே சிக்கி கொண்டு 4 பேரும் தீயில் கருகி அலறினர். தகவலறிந்து நாட்றம்பள்ளி மற்றும் வாணியம்பாடி தீயணைப்பு மீட்பு படை வீரர்கள் வந்து அரை மணி நேரத்திற்கும் மேல் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் கடை உரிமையாளர் குமாரும், மகன் தயாமூர்த்தியும் உடல் கருகி இறந்தனர். படுகாயத்துடன் வேலாயுதம், ராமன் ஆகியோர் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து அம்பலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories: