போதையில் பணம் கேட்டு தகராறு: தாயை பீர்பாட்டிலால் குத்திய மகன் கைது

பெரம்பூர்: வியாசர்பாடி சாஸ்திரி நகர் 11வது தெருவை சேர்ந்தவர் அப்புனு. இவர், வாட்ச்மேன் வேலை செய்து வருகிறார். இவரது, மனைவி கண்ணகி.  இவர்களுக்கு அஜய் (எ) லூசு அஜய் (22) என்ற மகன் உள்ளார். இவர், ரயில்வே ஒப்பந்த பணிகளில் கூலி வேலை செய்து வந்தார். போதைக்கு அடிமையானதால் வேலையை விட்டு ஒப்பந்ததாரர்கள் நிறுத்திவிட்ட நிலையில், தற்போது வேலை இல்லாமல் இருந்து வருகிறார்.

இந்நிலையில், அஜய் அடிக்கடி குடித்துவிட்டு தன் தாயிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபடுவது வழக்கம். நேற்று முன்தினம் தந்தை அப்புனு வேலைக்கு சென்றிருந்த நிலையில், அஜய் குடிபோதையில் தாயிடம், குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டிருந்தார். அப்போது, திடீரென்று பீர்பாட்டிலை உடைத்து, தாயின் தலை, முகம் உள்ளிட்ட இடங்களில் கொடூரமாக குத்தினார்.

இதில், பலத்த காயமடைந்த கண்ணகி வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார். அலறல் சத்தம் கேட்டு, ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் எம்கேபி நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அப்போது, ரோந்து பணியில் இருந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று, கண்ணகியை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் முகம் மற்றும் தலையில் பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த, எம்கேபி நகர் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், தப்பி ஓடிய அஜய் (எ) லூசு அஜயை நேற்று காலை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார். குடிபோதையில் பெற்ற தாயை மகனே கொடூரமாக குத்தி கொலை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: