சமூக வலைதளங்களில் போலி கணக்குகளை தொடங்கி பிரபல நடிகர்களின் பெயரில் லட்சக்கணக்கில் மோசடி: ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 2 சைபர் குற்றவாளிகள் கைது

சென்னை: ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அலாவுதீன் (27), வாகித் (25). சகோதரர்களான இவர்கள், இருவரும் கூட்டாக தமிழ் சினிமா நடிகர் கனா தர்ஷன்’ புகைப்படத்தை பயன்படுத்தி, அவரின் பெயரிலேயே முகநூலில் போலி கணக்கு உருவாக்கி உள்ளனர். அதன்மூலம், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு நட்புக்காக அழைப்பு அனுப்பி அதை அப்பெண் ஏற்றவுடன், அவருடன் நன்றாக பேசி பழகி அப்பெண்ணின் வாட்ஸ்-அப் எண்ணை பெற்று வாட்ஸ் அப் மூலமாக தகவல்களை பரிமாறிக் கொண்டுள்ளனர். மேலும், வீடியோ கால் பேசி அப்பெண்ணின் புகைப்படம் மற்றும் வீடியோக்களை ஸ்கிரீன் ஷாட் எடுத்து வைத்துக்கொண்டு அப்பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அந்த பெண் பணம் தர மறுத்ததால் அப்பெண்ணின் புகைப்படங்களை மார்பிங் செய்து சமூக வலைதளத்தில் பகிர போவதாக பிரட்டியதால் அதிர்சசி அடைந்து ரூ.2 லட்சத்திற்கும் மேலாக பணத்தை ஜிபே மூலமாக அனுப்பி உள்ளார்.

தொடர்ந்து மேலும் பணம் கேட்டு மிரட்டியதால் அப்பெண் ஆன்லைன் மூலமாக காஞ்சிபுரம் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில், வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய மாவட்ட போலீஸ் எஸ்பி சுதாகர் உத்தரவிட்டார். சைபர் கிரைம் ஏடிஎஸ்பி பாலகுமார் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் தலைமையில் எஸ்ஐ சதீஷ் மற்றும் வெற்றிவேலன், ஜான் ஆல்பர்ட், அரிபிரசாத் ஆகியோர் புலன் விசாரணை மேற்கொண்டனர். அதில், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த அலாவுதீன் (27), வாகித் (25) ஆகிய 2 பேரும் கூட்டாக இந்த குற்றத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. எனவே, அவர்கள் இருவரையும் ஈரோடு சென்று கைது செய்த போலீசார் குற்றம் புரிய பயன்படுத்திய செல்போன் மற்றும் லேப்டாப்களை கைப்பற்றி, ஒப்புதல் வாக்குமூலம் பெற்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: