நாக்பூர்: ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடருக்கு தயாராகி வரும் இந்திய வீரர்கள் பீல்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்தி பயிற்சி செய்து வருவதாக, தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியுள்ளார். இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் அதைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் பிப். 9ம் தேதி தொடங்க உள்ள நிலையில் இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், நாக்பூரில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த தலைமை பயிற்சியாளர் டிராவிட் கூறியதாவது: ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு முழு வீச்சில் தயாராகி வருகிறோம். அனைத்து வீரர்களுமே நல்ல உடல்தகுதியுடன் உள்ளனர். கடந்த சில மாதங்களாக டி20, ஒருநாள் போட்டிகளில் அதிகம் விளையாடி வந்த நிலையில், டெஸ்ட் அணியை மீண்டும் ஒன்றாகப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நிர்ணயிக்கப்பட்ட ஓவர் கிரிக்கெட்டில் இருந்து டெஸ்ட் சவாலுக்கு தயாராவது எப்போதுமே சற்று சிரமம் தான். அதற்காக வீரர்கள் வலைப்பயிற்சியில் கடுமையாக உழைப்பதும் கூடுதல் நேரம் செலவழிப்பதும் திருப்தியாக உள்ளது.