திருமலை: தெலுங்கு மாநிலங்கள் இடையே இயக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரயில் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டது. தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் இருந்து ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் வரை வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் நேற்று முன்தினம் செகந்திராபாத்தில் இருந்து புறப்பட்டு கம்மம் ரயில் நிலையத்தை நெருங்கும்போது, அடையாளம் தெரியாத நபர்கள் கற்களை வீசி தாக்கினர். இந்த தாக்குதலில் சேர்கார் கோச் சி-12 பெட்டியில் உள்ள கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தன. இதையடுத்து ரயில் விசாகப்பட்டினம் வந்தடைந்தது. அங்கு உடைந்த கண்ணாடிகள் மாற்றியமைக்கப்பட்டது. இதனால் விசாகப்பட்டினத்தில் இருந்து நேற்று காலை 5:45 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் 3 மணி நேரம் தாமதமாக காலை 8.52 மணிக்கு புறப்பட்டது.