அண்ணாமலைக்கு பதில் சொல்ல விரும்பவில்லை: மனு தாக்கலுக்கு பின் ஈவிகேஎஸ்.இளங்கோவன் பேட்டி

ஈரோடு கிழக்கு தொகுதி திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் நேற்று தனது தேர்தல் நடத்தும் அலுவலரான சிவகுமாரிடம், தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது, எம்பிக்கள் கணேசமூர்த்தி, அந்தியூர்  செல்வராஜ், காங்கிரஸ் சட்டப்பேரவைக்குழு தலைவர் செல்வ பெருந்தகை, முன்னாள்  எம்எல்ஏ சந்திரகுமார் ஆகியோர் உடனிருந்தனர். இதைத்தொடர்ந்து ஈவிகேஎஸ் இளங்கோவன் நிருபர்களிடம் கூறியதாவது: தேர்தலில் தனிப்பட்ட மனிதர் வெற்றி அடைவதைவிட மதச்சார்பற்ற சக்திகளின் வேட்பாளர் வெற்றி பெற விரும்புகிறேன். என் மகன் திருமகன் ஈவெரா விட்டுச்சென்ற பணிகளை தொடர விரும்புகிறேன்.

மாவட்ட அமைச்சர் முத்துசாமியுடன் இணைந்து ஈரோட்டுக்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்து எனது மகன் திருமகன் ஈவெரா பட்டியல் தயாரித்துள்ளார். அதில், பல பணிகளை செய்துள்ளார். மீதம் உள்ளவற்றை மேற்கொள்ள நான் பாடுபடுவேன். திமுகவினர் மிகச்சிறப்பாக தேர்தல் பணி செய்து வருகின்றனர். வேட்பாளர் அறிவிப்பிற்கு முன்பே எனக்காக வாக்கு கேட்டனர். இந்த கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஈரோட்டிற்கு நல்ல காரியம் செய்யவே நான் போட்டியிடுகிறேன். யார் எதிர்க்கிறார்கள் என்பது குறித்து எனக்கு கவலையில்லை. பாஜ தலைவர் அண்ணாமலைக்கு எல்லாம் பதில் சொல்லி எனது நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: