பசும்பால் குடியுங்கள், மதுவை தவிர்க்கவும்... மதுக்கடை முன்பு பசுக்களை கட்டி உமாபாரதி போராட்டம்: மத்திய பிரதேசத்தில் பரபரப்பு

இந்தூர்: மது குடிப்பதை தவிர்க்க மதுக்கடைகள் முன்பு பசுக்களை கட்டி உமாபாரதி நடத்திய போராட்டம் பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது. மத்தியப் பிரதேச மாநில முன்னாள் முதல்வர் உமாபாரதி. பா.ஜவை சேர்ந்த இவர் மது விற்பனைக்கு எதிராக போராடி வருகிறார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஒரு மதுக் கடையில் உமாபாரதி மாட்டுச் சாணத்தை வீசினார். மார்ச் 2022ல் போபாலில்  உள்ள ஒரு மதுக் கடை மீது கல் எறிந்தார். இந்தநிலையில் தற்போது ஓர்ச்சா நகரில் உள்ள மதுபானக் கடையின் முன்பு சாலைகளில் திரிந்த மாடுகளை இழுத்து கட்டி அதற்கு வைக்கோல் ஊட்டினார். மேலும் பசும்பால் குடிக்கவும், மதுவைத் தவிர்க்கவும் என்று மதுவிற்கு எதிராக கோஷம் எழுப்பினார்.

மேலும் மதுவை அரசு பணமாக மாற்றக் கூடாது என்றும் கூறினார். இந்தசம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குடியரசு தின விழாவில் பேசிய முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்,’ மத்தியபிரதேச மாநிலத்தில் பொதுமக்கள் மதுகுடிப்பதை தடுக்க புதிய மதுக்கொள்கை அமல்படுத்தப்படும்’ என்று அறிவித்தார். அதை தொடர்ந்து உமாபாரதி நடத்திய இந்த போராட்டம் வைரலானது. அவருடன் கைகோர்த்து போராடப்போவதாக காங்கிரஸ் அறிவித்தது. இதுபற்றி மபி உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா கூறுகையில்,’ மதுவுக்கு எதிரான உமாபாரதியின் போராட்டம் நல்ல விஷயம்தான்’ என்று கூறினார்.

Related Stories: