விபத்தில் 2 இளைஞர்கள் கீழே விழுந்த நிலையில் தீப்பொறியுடன் பைக்கை 4 கி.மீ இழுத்து சென்ற கார்: சாலையில் சென்ற மக்கள் பீதி

குர்கிராம்: அரியானாவில் விபத்தில் சிக்கிய பைக்கை, 4 கி.மீ தூரம் கார் இழுத்து செல்லும் போது தீப்பொறி பறந்ததால் மக்கள் பீதியடைந்தனர். அரியானா மாநிலம் குர்கிராமின் செக்டர் 65 காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட செக்டார் 62 பகுதியில், 2 இளைஞர்கள் பைக்கில் தங்களது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களின் பின்னால் வேகமாக வந்த கார், பைக்கில் வந்த இளைஞர்கள் மீது மோதியது. இதனால் இருவரும் சாலையில் விழுந்தனர். ஆனால் காயமின்றி தப்பினர். அப்போது, காரின் முன்பகுதியில் பைக் சிக்கியது. இந்த சம்பவத்திற்குப் பிறகு, காரின் ஓட்டுநர் காரை நிறுத்தாமல், வேகமாக ஓட்டத் தொடங்கினார். இதனால் காருக்கு முன்னால் சிக்கிய பைக் சாலையில் இழுத்துச் செல்லப்பட்டது.

அதிவேகமாக கார் சென்றதால், தீப்பொறிகள் பறந்தன. அவ்வழியாக சாலையில் நடந்து சென்றவர்கள் பீதியடைந்தனர். அப்போது சிலர் அந்தக் காரை துரத்திச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வெளியானது. அதைடுத்து குர்கிராம் போலீசார் பைக்கில் சென்ற இளைஞர்களிடம் புகாரை பெற்று, விபத்தை ஏற்படுத்திய காரின் வாகன எண் அடிப்படையில் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்த இடத்தில் இருந்து 4 கிலோ மீட்டர் தூரம் பைக் இழுத்து செல்லப்பட்டதாகவும், இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று போலீசார் கூறினர்.

Related Stories: