‘பாதயாத்திரைக்கு வாங்க சார்...’தெலங்கானா முதல்வருக்கு ஷூவை பரிசு அனுப்பிய ஷர்மிளா

திருமலை: தெலங்கானா மாநில ஒய்எஸ்ஆர் கட்சியின் தலைவர் ஷர்மிளா நேற்று முதல்வர் சந்திரசேகர ராவுக்கு (கேசிஆர்) பரிசாக அனுப்புவதாக கூறி ஒரு ஜோடி ஷூக்களை ஐதராபாத்தில் நிருபர்களிடம் காண்பித்தார். அப்போது அவர் கூறியதாவது:  தனது ஆட்சி அற்புதமாக இருப்பதாக முதல்வர் சந்திரசேகரராவ் கூறி வருகிறார். தெலங்கானாவில் எந்த பிரச்னையும் இல்லை என நிரூபித்தால் நான் அரசியலில் இருந்து விலகுகிறேன். இது உண்மை இல்லை என்றால் முதல்வர் சந்திரசேகரராவ் மக்களிடம் மன்னிப்பு கேட்டு முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும்.

சந்திரசேகரராவ் பல வாக்குறுதிகளை அளித்து முதல்வரானார். ஆனால், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. சந்திரசேகரராவுக்கு தைரியமும், ஆட்சியில் நம்பிக்கையும் இருந்தால் ஒரு நாள் பாதயாத்திரைக்கு என்னுடன் வர வேண்டும். இதற்காக தான் ஷூ பாக்ஸ் பிரகதி பவனுக்கு (முதல்வர் முகாம் அலுவலகத்துக்கு) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கால் சைஸ் சரியாக இல்லாவிட்டால் எக்ஸ்சேஞ்ச் செய்து கொள்ள பில் கூட அனுப்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: