பொத்தமேட்டுப்பட்டியில் ஜல்லிக்கட்டு 700 காளைகள் அதிரடி பாய்ச்சல்: போட்டி போட்டு அடக்கிய வீரர்கள்

துவரங்குறிச்சி: பொத்தமேட்டுப்பட்டியில் இன்று நடந்த ஜல்லிக்கட்டில் 700 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பொத்தமேட்டுப்பட்டியில் உள்ள புனித வியாகுல மாதா ஆலய திடலில், புனித அந்தோணியார் பொங்கல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது. மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் 700 காளைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஒரு குழுவிற்கு 20 பேர் வீதம் 300 வீரர்கள் களமிறங்கினர். காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டை ஸ்ரீரங்கம் ஆர்டிஓ செல்வராஜ் துவக்கி வைத்தார். முதலில் கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது.

அந்த காளை களத்தில் சிறிது நேரம் நின்று விளையாடி, தன்னை நெருங்கி வந்த வீரர்களை விரட்டி அடித்தது. இதைத்தொடர்ந்து திருச்சி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. இதில் சில காளைகள் வீரர்களை பந்தாடின. பல காளைகள் மின்னல் வேகத்தில் எல்லைக்கோட்டை கடந்து சென்றன.

காளைகள் முட்டி காயமடைந்தவர்களுக்கு அங்கு அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் மருத்துவக்குழுவினர் உடனடியாக சிகிச்சை அளித்தனர். போட்டியில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளையை அடக்கிய வீரர்களுக்கும் சில்வர் அண்டா, சைக்கிள், கட்டில், பாத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களும், ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டது. டிஎஸ்பி ராமநாதன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டை ஏராளமானோர் கண்டுகளித்தனர்.

Related Stories: