பேரூராட்சியில் ரூ.1.20 லட்சம் பறிமுதல்; செயல்அலுவலர் உள்பட 3 பேர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை இன்று அதிரடி ரெய்டு

கடலூர்: சேத்தியாத்தோப்பு பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கைப்பற்றிய நிலையில், வழக்குப்பதிவு செய்யப்பட்ட பேரூராட்சி செயல் அலுவலர் உள்பட 3 பேர் வீடுகளில் இன்று காலை முதல் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் பேரூராட்சி அலுவலகம் உள்ளது. இந்த பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற முறைகேடுகள் மற்றும் தணிக்கை குழு அறிக்கை குறிப்புகளின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்கவும், சுமூகமாக நடந்து கொள்ளவும், அங்கு செயல் அலுவலராக பணிபுரியும் சீனிவாசன் தரப்பில் லஞ்சம் கொடுக்கப்படுவதாக கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கடலூர் லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தேவநாதன் மற்றும் கடலூர் மாவட்ட துணை ஆய்வு குழு அலுவலர் சுபத்ரா தலைமையிலான அதிகாரிகள் நேற்று முன்தினம் (24ம் தேதி) பேரூராட்சி அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது கணக்கில் வராத ரூ.1.20 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது.

இந்த பணம் கைப்பற்றப்பட்ட நிலையில் தேர்வுநிலை பேரூராட்சியின் செயல் அலுவலர் சீனிவாசன், உள்ளாட்சி நிதி தணிக்கை உதவி இயக்குனர் பூங்குழலி, உள்ளாட்சி நிதி தணிக்கை ஆய்வாளர் விஜயலட்சுமி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். உள்ளாட்சி தணிக்கை செய்ய வந்தபோது அங்கு நடைபெறும் முறைகேடுகளை மறைக்கும் விதமாக லஞ்சம் பெற இருந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில், செயல் அலுவலர் சீனிவாசனுக்கு சொந்தமான வடலூரில் உள்ள வீட்டிலும், கடலூர் ஆனைகுப்பத்தில் உள்ள உள்ளாட்சி நிதி தணிக்கை உதவி இயக்குனர் பூங்குழலியின் வீட்டிலும், திருவந்திபுரத்தில் உள்ள உள்ளாட்சி தணிக்கை குழுவின் ஆய்வாளர் விஜயலட்சுமி வீட்டிலும், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று காலை 7 மணி முதல் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வீட்டில் உள்ளவர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் இருந்து எவரையும் வெளியே அனுப்ப வில்லை. மேலும், வெளியில் இருந்தும் உள்ளே வர யாரையும் அனுமதிக்காமல் சோதனை நடந்து வருகிறது. லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் இந்த சோதனை கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

The post பேரூராட்சியில் ரூ.1.20 லட்சம் பறிமுதல்; செயல்அலுவலர் உள்பட 3 பேர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை இன்று அதிரடி ரெய்டு appeared first on Dinakaran.

Related Stories: