புழல் பகுதியில் இளைஞர் வெட்டி கொலை

சென்னை: புழல் அடுத்த லட்சுமிபுரம் குமரன் தெருவை சேர்ந்தவர் சுதா சந்தர் (22). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர் ஆவடியில் இருந்து லட்சுமி புரத்திற்கு வந்து இரண்டு மாதம் ஆகிறது. இந்நிலையில் சுதா சந்தர் மோட்டார் சைக்கிளில் இளம் பெண்ணுடன் நேற்று இரவு 8.30 மணியளவில் புழல் அடுத்த விநாயகபுரம், கல்பாளையம், வில்லிவாக்கம் சாலையில் சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் சுதா சந்தரை வழி மறித்து மறைத்து வைத்திருக்க கத்தியை எடுத்து தலை, கழுத்து, உடல் முழுவதும் சரமரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதையடுத்து சம்பவ இடத்திலேயே சுதா சந்தர் ரத்த வெள்ளத்தில் பலியானார். பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த புழல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குபதிவு செய்து சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் கள்ளக்காதலால் நடந்ததா? அல்லது முன்விரோதம் காரணமாக நடந்ததா? என விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மோட்டார் சைக்கிளில் உடன் வந்த ராகினி என்பவரிடமும் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: