அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் காட்டுப்பன்றிகளால் சேதம்-பாதுகாக்க விவசாயிகள் கோரிக்கை

காரியாபட்டி : காரியாபட்டி, நரிக்குடி பகுதிகளில் நெற்பயிர்களில் காட்டுப்பன்றிகள் சேதப்படுத்துவதால் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

காரியாபட்டி நரிக்குடி பகுதிகளில் 270க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. ஆவியூர், சாலை மரைக்குளம், அல்லாளப் பேரி, நாலூர், உலக்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள பொதுமக்கள் விவசாயத்தையே முதன்மை தொழிலாக கொண்டு வாழ்ந்து வருகின்றனர். விவசாயிகள் நிலங்களில் நெல், பருத்தி கடலை, வாழை, வெங்காயம் உள்ளிட்ட பல்வேறு பயிர் வகைகளை சாகுபடி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்களை காட்டுப்பன்றிகள் இரவு நேரத்தில் புகுந்து அழித்து வருகின்றன. காரியாபட்டி நரிக்குடி பகுதிகளில் அதிகளவில் காட்டுப்பன்றிகள் சுற்றித் திரிகின்றன. இரவு நேரங்களில் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது, காரியாபட்டி, நரிக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டு பன்றிகளின் தொல்லை அதிகமாக உள்ளது. இரவு நேரத்தில் வயலுக்குள் புகுந்து நெல்பயிர்களை சேதப்படுத்தி விட்டு செல்கிறது. காட்டு விவசாயங்களில் பயிரிடப்படும் கடலை மற்றும் பருத்தி போன்றவற்றை காட்டுப் பன்றிகளுக்கு பயந்து கடந்த மூன்று ஆண்டுகளாக பயிரிடப்படாமல் விட்டு விட்டதால் விவசாய நிலங்கள் அனைத்தும் தரிசு நிலங்களாக மாறி வருகிறது.

காட்டுப் பன்றிகளால் இந்த பகுதியில் விவசாயமே அழிந்து போகும் நிலையும் இருந்து வருகிறது. காட்டு பன்றிகளிடம் இருந்து விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் என்று இந்த பகுதி விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை வைத்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்கின்றனர்.

இந்நிலையில் காரியாபட்டி தாலுகாவில் அல்லாளப் பேரி கிராமத்தில் புது கண்மாய் பகுதியில் உள்ள நெல் வயல்களில் காட்டுப்பன்றிகள் புகுந்து சேதப்படுத்துவதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். பயிர்களை சேதப்படுத்தி வரும் காட்டு பன்றிகளிடமிருந்து விவசாயிகளை பாதுகாக்கவும், அதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

Related Stories: