டிரைவரை தாக்கி காரை கடத்தி பணம் கொள்ளை: 6 பேர் கும்பல் கைது

பவானி: ராஜஸ்தான் மாநிலம், அக்வாரியைச் சேர்ந்தவர் விகாஸ் (எ) விக்ரம் (42). கடந்த 3 வருடங்களாக ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், சுந்தரகிரி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வரும் இவர், ஆக்டிங் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரைத் தொடர்பு கொண்ட நெல்லூரைச் சேர்ந்த பாரத் ஜெயின், கோவையில் உள்ள தனது தங்கையை காரில் சென்று அழைத்து வர வேண்டும் என்று கூறி கடந்த 20ம் தேதி காரை கொடுத்துள்ளார்.

அந்தக் காரில் புறப்பட்ட விகாஸ், 21ம் தேதி அதிகாலை சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் பவானியை அடுத்த லட்சுமி நகர், காவிரி ஆற்று பாலம் அருகே சென்றபோது, வேனில் வந்த கும்பல் இரும்பு பைப் கொண்டு கார் கண்ணாடியை உடைத்துள்ளனர். பின்னர் விகாஸை இறக்கிவிட்டு அவரிடம் இருந்த பணத்தைக் கொள்ளையடித்துக் கொண்டு காரைக் கடத்திச் சென்றது. இதுகுறித்த புகாரின் பேரில் சித்தோடு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், சித்தோடு போலீசார் நேற்று லட்சுமி நகர், கந்தசாமி மில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கோவையில் இருந்து சேலம் நோக்கிச் சென்ற பிக்அப் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் வாகனத்தின் எண் போலியாக இருந்ததும், வாகனத்துக்குள் அரிவாள், பட்டாக்கத்தி, இரும்பு பைப்புகள், உருட்டு கட்டை, மிளகாய் பொடி மற்றும் ரொக்கம் ரூ.20,000, செல்போன் ஆகியவை இருந்தது போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர். வாகனத்தில் வந்த 6 பேரிடம் விசாரணை நடத்தினர்.

அதில், அவர்கள் கேரளாவை சேர்ந்த ஜெயன் (45), சந்தோஷ் (39), டைட்டஸ் (33), விபுல் (எ) சந்தோஷ் (31), முஜீப் ரகுமான் (37), கரிம்பா, காஞ்சிராம், முஜீர் ரஹ்மான் (45) என்பதும், கடந்த 21ம் தேதி சித்தோடு லட்சுமி நகர் அருகே காரைக் கடத்தி, அந்தக் காரில் சென்று பலரிடமும் பணம் கொள்ளையடித்த வழக்கில் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, 6 பேரும் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள கோடாளி ஸ்ரீதர், சசிபோஸ், ராகுல், ஸ்ரீகாந்த் மற்றும் அடையாளம் தெரியாத நபர் உட்பட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: