புதுடெல்லி: ‘வரும் 2024 மக்களவை தேர்தலில் பாஜவை எதிர்கொள்ள எந்த ஒரு எதிர்க்கட்சி கூட்டணிக்கும் மையப் புள்ளியாக காங்கிரஸ் கட்சி இருக்க வேண்டும்’ என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறி உள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும் தலைமை செய்தித் தொடர்பாளருமான ஜெய்ராம் ரமேஷ், பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியிருப்பதாவது: ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணத்திற்குப் பிறகு, 2024 மக்களவை தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணியின் ஆணிவேராக காங்கிரஸ் நிச்சயம் இருக்கும் என்றே நம்புகிறேன். ஏனெனில், பாஜவைத் தவிர நாங்கள் மட்டும் தேசிய அளவிலான கட்சியாக உள்ளோம். நாங்கள் பல மாநிலங்களில் ஆட்சியில் இல்லாமல் இருக்கலாம். ஆனால், ஒவ்வொரு கிராமத்திலும், பட்டி தொட்டியிலும், நகரத்திலும், ஒவ்வொரு தொகுதியிலும் காங்கிரஸ் தொண்டர்கள் இருக்கிறார்கள். நாட்டின் எந்த மூலைக்கு சென்றாலும் காங்கிரஸ் குடும்பங்களை பார்க்கலாம்.