சென்னை: தமிழ்நாடு பள்ளிகளுக்கு இடையிலான கைப்பந்துப் போட்டி சென்னை பெரியமேடு நேரு, எழும்பூர் ராதாகிருஷ்ணன் விளையாட்டு அரங்கங்களில் நடந்து வருகிறது. சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் நடத்தும் இந்தப் போட்டியில் சுமார் 100 பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த 1200 மாணவர், மாணவியர் பிரிவுகளில் பங்கேற்றனர். எழும்பூர் அரங்கில் பள்ளி மாணவர்களுக்கான 3வது இடத்துக்கான ஆட்டங்களும், இறுதி ஆட்டங்களும் நேற்று நடந்தன. மாணவர்களுக்கான பிரிவில் திருவாரூர் வேலுடையார் பள்ளி 25-17, 25-22 என்ற நேர் செட்களில் சென்னை டான் பாஸ்கோ பள்ளியை வீழ்த்தி 3வது இடத்தை பிடித்தது.
மாணவிகளுக்கான பிரிவில் ஈரோடு குமுதா மேனிலைப் பள்ளி 25-22, 25-16 என நேர் செட்களில் சென்னை எல்எஸ்எஸ் மேனிலைப் பள்ளியை வென்று 3வது இடத்தை கைப்பற்றியது.தொடர்ந்து நடந்த மாணவிகளுக்கான இறுதி ஆட்டத்தில் சென்னை ரோல்டன் பெண்கள் மேனிலைப்பள்ளி 25-18, 25-16 என நேர் செட்களில் மயிலாடுதுறை கலைமகள் மேனிலைப் பள்ளி வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. அதேபோல் மாணவர்களுக்கான இறுதி ஆட்டத்தில் சென்னை செயின்ட் பீட்டர் பள்ளி 23-25, 26-24, 25-17 என்ற செட்களில் சென்னை செயின்ட் பீட்ஸ் பள்ளியை போராடி வென்று சாம்பியன் ஆனது.